

கி.பி 1311 டில்லியை ஆண்டுகொண்டிருந்த முகலாய மன்னன் அலாவுதின் கில்ஜி மாலிக் கஃபூர் தலைமயில் ஒரு படையை அனுப்பினான், பாண்டிய நாட்டை ஆக்ரமிப்பதற்காக. வந்த படை பாண்டிய நாட்டை துவம்சம் செய்தது. மீண்டும் ஏழாண்டுகள் கழித்து கி.பி1318 ல் வந்த முகலாய படை பாண்டிய நாட்டை சூரையாடியது. மீண்டும் ஐந்தாண்டுகள் கழித்து கி.பி 1323 வந்த படையை தலைமை தாங்கி நடத்தி வந்தது உலூப் கான்.( இவன் பின்னாளில் முகமது பின் துக்ளக் என்னும் பெயரில் டில்லியில் அரசாண்டான்) இந்த படையின் நோக்கம் திருவரங்கத்தை துவம்சம் செய்வது, கோயிலில் இருக்கும் மூலவர் மற்றும் உற்சவ விக்ரகங்களை சிதைப்பது. இந்த படை தற்போது திருச்சிக்கு அருகில் உள்ள சமயபுரத்தில் முகாமிட்டிருந்தது. மறு நாள் திருவரங்கத்தை முற்றுகையிட திட்டம். அப்போது திருவரங்கத்தில் நம்பெருமாளுக்கு உற்சவம் நடந்து கொண்டிருந்தது. முற்றுகை திட்டம் திருவரங்கத்தில் உள்ள வைணவ பெரியவர்களுக்கு தெரிந்தது. இருப்பது ஒரு இரவு அதற்குள் ஏதாவது செய்ய வேண்டும். பிள்ளைலோகாச்சாரியர், தேசிகர், சுதர்சன பட்டர் தலைமயில் கூட்டம் கூட்டப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது, அதன்படி பிள்ளைலோகாசாரியர் தலைமயில் ஒரு குழு மூலவருக்கு முன்னால் கல்லால் கட்டடம் எழப்பிவிட்டு உற்சவ விக்ரகத்தை எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி செல்ல வேண்டும், சுதர்சன பட்டர் தலைமயிலான குழு வடக்கில் சென்று முகலாய படையை தடுத்து நிறுத்தி நேரம் பெற்று தர வேண்டும், தேசிகர் ஓலைசுவடிகளையும் சுதர்சன பட்டரின் இரு புதல்வர்களையும் காப்பாற்ற வேண்டும்.
சுதர்சன பட்டர் தலைமயில் 12,000 வைணவர்கள் திருவரங்கத்தின் வடக்கே சென்று காவல் காத்தனர். பிள்ளைலோகாசாரியர் மூலவருக்கு கல்திரை சமர்ப்பித்துவிட்டு உற்சவ மூர்த்தியை ஒரு பல்லக்கில் வைத்து தெற்க்கு நோக்கி பயணித்தார். முகலாய படையெடுப்பில் அன்று திருவரங்கத்தை காக்கும் பொருட்டு சுதர்சன பட்டர் உட்பட 12,000 வைணவர்கள் கொல்லப்பட்டனர். பிள்ளைலோகாசாரியர் உற்சவ மூர்த்தியை எடுத்து செல்கையில் ஜோதிஷ்குடி என்னும் ஊரில் தன் இன்னுயிர் நீத்தார் அப்போது அவருக்கு வயது 118 . தேசிகர் அரும்பாடுபட்டு ஓலை சுவடிகளையும் சுதர்சன பட்டரின் இரு புதல்வர்களையும் காப்பாற்றினார். உற்சவ மூர்த்தி திருமாலிருஞ்சோலை வழியாக குமுளி, இன்றைய காலிக்கட் சென்று மேலக்கோட்டையில் சிறிது காலம் இருந்துவிட்டு திருமலையில் தஞ்சம் அடைந்தார். பிறகு 57 ஆண்டுகளுக்கு பிறகு கி.பி 1370ல் மீண்டும் திருவரங்கம் வந்தடைந்தார். அந்த 57 ஆண்டுகள் வைணவ சம்பிரதாயத்தின் இருண்ட காலம். வைணவர்களின் தலைநகராக கருதப்படும் திருவரங்கத்தை காப்பாற்றி கொடுத்த 12,000 வைணவர்களும் வீர வைணவர்கள்தானே!.
No comments:
Post a Comment