Thursday, July 10, 2008

ரெப்

நான் ஒரு ரெப் அப்படின்னா பிரதிநிதி சாதரண பிரதிநிதி இல்லை மருத்துவ பிரதிநிதி. ரெப்புக்களின் அடையாளம் கையில பை, கழுத்துல டை, வாயில பொய். எங்களை கண்டால் பேஷண்ட்ஸ் எல்லரும் அலறுவாங்க (வந்துட்டன்யா பைய தூக்கிகிட்டு).
கல்லூரி முடித்து இரெண்டு மாதம் ஒரு ஃபிரிலான்ஸருக்கு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன்,பிறகு எட்டு மாதம் மேக்ஸ்வொர்த் என்னும் நவீன காய்கறிகடையில் காய்கறி விற்றேன் பிறகு பென்சில் விற்றேன் எல்லாம் முடிந்தபின் கெடில்லா ஃபார்மாவில் மருத்துவ பிரதிநிதியாக சேர்ந்து இன்று வரை அப்படிதான் இருக்கிறேன். கெடில்லா ஃபார்மாவில் ஒரு பிரிவிற்க்கு லெசாந்தே(Le sante’ ஃபெரிஞ்ச் பெயர் நல்ல ஆரோக்யம் என்று அர்த்தமாம்) என்று பெயர் அதில் சரியாக முட்டாள்கள் தினத்தன்று (Apr1) அறிவாளியாக சேர்ந்தேன். சேர்ந்தவுடன் அகமதாபாத்தில் 15 நாட்கள் பயிற்சி. அது ஒரு நரகம். முதன் முதலாக உடற்கூறு(Anotomy), உறுப்புக்களின் வேலை(Physiology), நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மருந்துக்களின் உபயோகம், மருந்து உடம்புக்கு என்ன செய்யும்(Pharmacokinetics), உடம்பு மருந்துக்கு என்ன செய்யும்(Pharmacodynamics) என்று ராப்பகலாக மண்டைக்குள் திணித்தார்கள். இதுதவிர மருத்துவர்களிடம் அட்டையை எப்படி உபயோகிப்பது என்று சொல்லி முடித்தார்கள். இதில் முக்கியான விஷயம் என்னவென்றால் சொந்த புத்தியெல்லாம் இங்கு உபயோகிக்க கூடாது. அவர்கள் காகிதத்தில் அச்சுஅடித்து கொடுப்பதை வரி பிசகாமல் அப்படியே பேச வேண்டும்(Verbatim). எல்லாம் கற்றுக் கொண்டு(!) சென்னை வந்து சேர்ந்தேன். சென்னை என்னை போட வெண்ணை என்றது.
சென்னையில் என் பிரிவிற்கு நான் தான் முதல் ரெப் பிறகு அடுத்தடுத்து எட்டு பேர் வந்து சேர்ந்தார்கள். இதில் ஒரு பெண்ணும் அடக்கம். நிறுவனம் முதன்முறையாக எங்கள் பிரிவை அறிமுகம்(launch) செய்வதால் மேலிடத்தில் ஒரு மட்டமான ஒரு திட்டம் போட்டார்கள்(Intelligent Strategy) அதன்படி மருத்துவர்களிடம் சென்று தேங்காய் உடைக்க செய்ய வேண்டும்.
தினமும் காலை கடைக்கு சென்று தேங்காய் வாங்கி வந்து வீட்டில் அம்மா, அப்பா தங்கை உதவியால் தேங்காயின் கண்ணை நோண்டி தண்ணீரை வெளியேற்றி உள்ளுக்குள் ஒரு காகிதம்(We Seek Your Support For The New Division, Lesante) சொருகி, மீண்டும் தேங்காயின் கண்ணை நார்களால் மூடி, கண் கட்டு வித்தை செய்ய வேண்டும்.இது ஒரு வாரம் நன்றாக சென்றது. என் பொது மேலாளர் சென்னையை சுற்றி பார்க்க வந்துவிட்டு 2 மருத்துவரை காண வேண்டி சென்றோம் தேங்காயுடன். எல்லம் பேசி முடித்து தேங்காய் படலம் வந்தது. மருத்துவர் தேங்காய் உடைக்க மறுத்தார். அவரை இம்சித்த GM தேங்காய் உடைத்தால் தான் ஆயிற்று என்று ஒரே பிடிவாதம். மருத்துவரும் தேங்காய் உடைத்தார். அவருடைய மேஜையெல்லம் ஒரே இளநீர்.
இப்படியே ஒரு வருடம் ஒடியது. ரெப் வேலையின் நெளிவு சுளிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்தது.ஒரே மருத்துவரை எத்தனை முறை பார்ப்பது ஆதலால் மணியடிக்க ஆரம்பித்த காலம். மணியடிப்பது என்றால் ஒரு கதை. மேல்லோகத்தில் சிவனும் பார்வதியும் பேசிக்கொண்டிருந்தார்களாம் எந்த துறையை சார்ந்தவர்கள் ஒரு நாளில் அதிகம் பொய் சொல்கிறார்கள் என்று. மருத்துவர்களா,வக்கீல்களா, ரெப்புக்களா… என்று. அவர்கள் தீர்மானித்து பொய் சொன்னால் மணியடிப்பது போன்று ஏற்பாடு செய்தார்கள். மருத்துவர்கள் மணி விட்டு விட்டு அடித்தது ,வக்கீல்கள் மணி அவர்கள் வாதாடும் போது அடித்தது ஆனால் ரெப்புக்கள் மணி மட்டும் அடிக்கவில்லை, கடவுள்களுக்கு ஒரே ஆச்சரியம் ரெப்புக்கள் நல்லவர்கள் என்று முடிவு கட்டும் போது இரவு பத்து மணிக்கு ரெப்புக்களின் மணி ஓங்கி ஒங்கி ஒலித்ததாம் பார்த்தல் அவர்கள் Daily Report எழதிக்கொண்டிருந்தார்கள். இதுதான் மணியடிப்பதின் கதை.
என் கல்லூரி நண்பர்களைவிட அப்போது நான் தான் அதிகம் சம்பாதித்துக்கொண்டிருந்தேன். அவர்கள் கணினியில் ஏதோ செய்துக்கொண்டு சொற்ப்பமாக சம்பாதித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அள்ளி அள்ளி செலவு செய்வேன் பந்தாவிற்காக. ஐந்து வருடம் கழித்து பார்க்கிறேன் நான் அதே ரெப்பாக தான் இருந்தேன் அவர்கள் அனைவரும் அமெரிக்க, லண்டன், துபாய் என்று கல்யாணமாகி ஐக்கியமாகிவிட்டாற்கள்.
திருவல்லிக்கேணி, மாம்பலம் ஏரியாக்களில் தன் ரெப்புக்கள் அதிகம் ஏனென்றால் அங்குதான் மேன்ஷன்கள் அதிகம். தினமும் 5 கால்கள் பார்த்துவிட்டு மீதி கால்களுக்கு மணியடித்துவிட்டு சக ரெப் ஊழிய மேன்ஷன்களில் ஒரே ஆட்டம் தான்.
என் வீட்டிற்கு கீழேயே ஒரு ரெப் குடிவந்தான் அவன் எப்போதும் ஒன்று குறிப்பிடுவான் “ரெப் பாடைகளுக்கு கல்யாணமே ஆகாது மாமே..”. இது உண்மைதான் எத்தனையோ ரெப்புக்களை பார்த்திருக்கிறேன் கல்யாணம் தடைப்பட்டு முதிர்கன்னர்களாக ஆனபின் தான் கல்யாணம் நடந்திருக்கிறது. சீக்கிரம் நடந்திருந்தால் அது உறவுக்கரப் பெண்ணாயிருக்கும். தெய்வாதீனமாக என் மாமனார் வீடு குக்கிராமத்தில் இருந்ததால் அப்பாவியான ஒரு பெண்ணிற்க்கு ரெப்பான என்னை கட்டிவைத்தார்கள்.
கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்பது போல் ரெப்பாக வேலைக்கு சேர்ந்தவன் ரெப்பாக தான் ஓய்வு பெறுவான். எனக்கு ரெப்பாகவே ஓய்வு பெற்ற பல தாத்தாக்களை தெரியும்(இவர்கள் யூனியன் தாதாக்கள் எப்போ இவர்களை பார்த்தாலும் Supscription கட்டியாச்சா என்று கேட்ப்பார்கள்).
எப்படியோ சாதா ரெப்பிலிருந்து பதவி உயர்வு பெற்று பெற்று வேறு கம்பெனிகள் மாறி இப்போது நைஜீரியாவில் சூப்பர் ரெப்பாக மன்னிக்கவும் Sales and Marketing Controller ஆக ஒரு தனித்துவமான மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
ரெப்ஸ் வாழ்க்கை இத்துடன் முடிந்துவிடவில்லை இன்னுமும் நிறைய இருக்கிறது நேரம் கிடைக்கும் போது மேலே சொல்கிறேன் .
வாழ்க ரெப்ஸ்…

2 comments:

Unknown said...

அன்புடன் பாலாஜி,

உனது எழுத்துகள் சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் இருந்தது. படித்துவிட்டு வயிறு குலுங்க சிரித்தேன் (நானும் உன்னோடு தேங்காய் உடைத்தவள் அல்லவா?). உனது எழுத்து நடை சரளமாகவும் மொழி நடை அழகாகவும் இருக்கிறது. நிவேதனாவும் படித்துச் சிரித்தாள். மேலும் நிறைய எழுத பெஸ்ட் ஆப் லக்.

வித் லவ்
சுபா

Unknown said...

பதிவு மித அருமை.நானும் மருத்துவ பிரதிநிதிதான்.தேங்காய் உடைத்த அனுபவத்தை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது,என்ன மட்டமான ஐடியா!